SELANGOR

அமிருடின் மந்திரி புசாராக நீடிக்க ஹராப்பான் தலைவர்கள் ஒருமித்த ஆதரவு

ஷா ஆலம், ஆக 17- சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி சிலாங்கூர் மந்திரி புசாராக தொடர்ந்து நீடிக்க மாநிலப்
பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமிருடின் மந்திரி புசராக நியமிக்கப்படுவதை நாங்கள் கருத்திணக்கத்தின்
அடிப்படையில் ஏற்றுக் கொண்டோம். இதனை அரண்மனைக்கு அனுப்பிய
கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளோம் என்று சிலாங்கூர் மாநில அமானா கட்சித்
தலைவர் இஷாம் ஹஷிம் கூறினார்.

மாநிலத்தின் அந்த உயர் பொறுப்புக்கு மூன்று பெயர்களை அனுப்பும்படி
அரண்மனைத் தரப்பு இட்ட உத்தரவுக்கேற்ப மூவரின் பெயர்
அனுப்பப்பட்டுள்ளதாக ஹிஷாமை மேற்கோள் காட்டி சினார் ஹரியான்
செய்தி வெளியிட்டுள்ளது.

அரண்மனை மூன்று பெயர்களை அனுப்பும்படி கேட்டது உண்மைதான்.
அமிருடின்தான் மந்திரி புசார் என்பது தொடக்கம் முதலே உடன்பாடு
காணப்பட்ட விஷயமாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர்
தெரிவித்தார்.

மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் மந்திரி புசார் பதவிக்கு வேறு
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில
பிகேஆர் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுவதையும் அவர்
மறுத்தார்.

பதவி பிரமாண நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரண்மனைத்
தரப்பு கவனிப்பதற்கு ஏதுவாக மந்திரி புசாரின் பதவியேற்பு கூடின பட்சம்
வரும் திங்கள்கிழமை நடைபெறும் என்று ஊடகங்கள் தகவல்
வெளியிட்டிருந்தன.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்
லண்டனில் புரேஸ்டெட் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு நேற்று
முன்தினம் தாயகம் திரும்பினார்.


Pengarang :