SELANGOR

மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க தன் பணியைத் தொடர்வேன் – கின்றாரா மாநில சட்டமன்ற உறுப்பினர் உறுதி

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: கின்றாரா மாநில சட்டமன்ற உறுப்பினர்  இதற்கு முன்பு தீர்க்கப்படாதச் சில சிக்கல்களைத் தீர்க்க தன்  முயற்சியைத் தொடர்வார்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் ஓய்வு நேரத்தை வசதியாக அனுபவிக்கப் பொதுப் பூங்காக்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தப்படும் என்று இங் சி ஹான் கூறினார்.

மேலும், அதிக திறன்  மற்றும் உயரிய வருமானமுடைய  வேலை வாய்ப்புகளை உருவாக்க முதலீடுகளை ஈர்க்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க, சாலைகளை மேம்படுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் மூலம் முயற்சிக்கிறோம். தற்போது நாங்கள் இப்பணிக்கான கூடுதல் ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கிறோம்,“ என்றார்.

“முதலீட்டாளர்களை மூலோபாய பகுதிகளுக்கு ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறேன், குறிப்பாகப் பூச்சோங் தொழில்துறை பகுதியில்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், கின்றாரா மாநிலச் சட்டமன்றத்தின் பிரதிநிதியாக நிறைவேற்றும் பொறுப்பும் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனலின் வேட்பாளர் வோங் யோங் காங்கைத் தோற்கடித்து 54,535 பெரும்பான்மையுடன் சி ஹான் வெற்றி பெற்றார்.


Pengarang :