சிறப்பான தேசிய தினக் கொண்டாட்டம்- அரசாங்கத்திற்கு பேரரசர் பாராட்டு

கோலாலம்பூர், செப் 2- நாட்டின் 66வது சுதந்திர  தினக் கொண்டாட்டம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடைபெற்றதற்காக ஒற்றுமை அரசாங்கத்திற்கு மாட்சிமை  தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா  தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

பேரரசர் மற்றும் பேரரசியார் என்ற முறையில் தேசிய தினக் கொண்டாட்டத்தில் தாங்கள் கலந்து  கொள்வது இதுவே இறுதி முறை என்பதால் இந்தப் பேரணி தங்களுக்கு மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குவதாக அவர் சொன்னார்.

மிகவும் சிறப்பான முறையில் கொண்டாட்டத்தை நடத்தியதற்காக மலேசிய அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டம் எங்கள் மனதில் எப்போதும் பசுமையோடு இருக்கும் என்று பேரரசர்  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க இத்தினத்தில் கலந்து கொண்ட பல்லின மக்களுக்கும் மாமன்னர் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொண்டாட்டத்தில் வெளிப்படும்  ஒற்றுமை , நாட்டுப்பற்று உணர்வு மற்றும் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் மிகவும் பெருமைக்குரிய வையாகும்.

இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு செயல்பட்ட ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று அல் அல்-சுல்தான் அப்துல்லா கூறினார்.


Pengarang :