பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்- இந்தியாவைச் சேர்ந்த சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், செப் 24- உள்நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுச் சாமியார் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த சாமியார் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று செர்டாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் இஸூடின் அப்துல் வஹாப் கூறினார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழியால் தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் முப்பது வயது மதிக்கத்தக்க உள்நாட்டுப் பெண்ணிடமிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் காவல் துறை புகார் ஒன்றைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

சமய நிகழ்வொன்றின் போது அப்பெண்ணுடன் அந்த சாமியாருக்கு அறிமுகமானதாக கூறிய அவர், பூச்சோங் வட்டாரத்தில் அப்பெண்ணுக்குச் சொந்தமான காரில் அந்த அடாதச் செயலை அச்சாமியார் புரிந்துள்ளார் என்றார்.

இந்த சம்பவத்தினால் மனஉளைச்சலுக்குள்ளாகியிருந்த அப்பெண் கடந்த மாதம்தான் இது குறித்து போலீசில் புகார் செய்தார் என்று இஸூடின்  சொன்னார்.

இந்த புகார் தொடர்பில் சம்பந்தப்பட்டப் பெண்ணிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் குற்றவியல் சட்டத்தின் 376 பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அவ்வாடவரை தாங்கள் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :