கோலாலம்பூர், அக் 13– புதிய தொழில்துறை பெருந்திட்டத்தின் (என்.ஐ.எம்.பி.) பணி இலக்கிற்கான உந்து சக்தியாக விளங்கும் வகையில் அத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் பத்து விழுக்காட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மொத்தம் 9,500 கோடி வெள்ளி முதலீட்டைக் கொண்ட இந்த திட்டத்தின் வாயிலாக சராசரி 4,510 வெள்ளி மாதச் சம்பளத்துடன் கூடிய 33 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் சொன்னார்.
வட்டார பொருளாதார வல்லரசாக நாட்டை உயர்த்துவதை இந்த மடாணி பொருளாதார கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நோக்கத்தை அடைவதற்கு ஏதுவாக பொருளாதார கட்டமைப்புகள் சீரமைப்புச் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் நடப்பிலுள்ள வாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என்று நாடாளுமன்றத்தில் இன்று 2024 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.