ஈப்போ, அக் 17- இங்குள்ள கம்போங் சுங்கை தாப்பா தம்பாஹானில் உள்ள
ஒரு வீட்டில் ஆறு வயதுச் சிறுவன் சலவை இயந்திரத்தில் இறந்து
கிடக்கக் காணப்பட்டான்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.44 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாக ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா
ஹசான் கூறினார்.
இந்த சம்பவம் லோட் வீடொன்றில் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், சம்பவம்
நிகழ்ந்த போது பாதிக்கப்பட்டச் சிறுவன் தன் குடும்பத்திருடன் வீட்டில்
இருந்ததாகச் சொன்னார்.
அச்சிறுவன் சலவை இயந்திரத்தில் சுயநினைவற்ற நிலையில் கிடந்ததை
அவரின் பாட்டி காலை 9.30 மணியளவில் கண்டதாக அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
அச்சிறுவன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எனினும் சிகிச்சை பலனின்றி காலை
11.02 மணிக்கு அவர் உயிரிழந்ததாகவும் யாஹ்யா குறிப்பிட்டார்.
தலையில் கனமானப் பொருளால் தாக்கப்பட்டதால் அச்சிறுவன்
உயிரிழந்தது ராஜா பெர்மைசூரி மருத்துவமனையின் தடயவியல் துறை
மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும்
சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் (சட்டம் 611)
31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்
அவர்.
இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய தங்கள்
பிள்ளைகளின் நடவடிக்கைகளை அணுக்காகக் கண்காணித்து வரும்படி
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை அவர் அறிவுறுத்தினார்.