NATIONAL

கட்டிடத்தின் கூரையில் இரு மனித எலும்புக்கூடுகள் மீட்பு- சித்தியவானில் சம்பவம்

ஈப்போ, அக் 17- சித்தியவானிலுள்ள வங்கி ஒன்றின் அருகிலுள்ள
கட்டிடத்தின் கூரையில் இரு மனித எலும்புக்கூடுகள் நேற்று காலை
கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் பெண்மணி ஒருவரிடமிருந்து
நேற்று காலை 10.20 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக மஞ்சோங்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது நோர்டின் அப்துல்லா
தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனையிட்ட போது அடையாளம் தெரியாத
நபர்களின் இரு எலும்புக்கூடுகளும் அதன் அருகில் பேராக் மாநில கொடி,
செலோடேப் எனப்படும் கருப்பு ஒட்டு வில்லை துண்டுகள் மற்றும் பல
வண்ணங்களைக் கொண்ட துணியின் கிழிந்த துண்டுகள் உள்ளிட்ட
பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

மேலும், அழுக்கடைந்த வெள்ளை நிற டிசட்டை, தலையணை உறை,
மனித மண்டை ஓடு என நம்பப்படும் பொருள் அடங்கிய சிவப்பு நிற
பிளாஸ்டிக் பைகள், ஒரு கத்தி ஆகியவையும் அங்கிருந்து மீட்கப்பட்டன
என்றார் அவர்.

அவ்விரு மனித எலும்புக்கூடுகளும் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி
பைனுன் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டுச்
செல்லப்பட்டதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :