NATIONAL

மக்களுக்கு உதவித்தொகை ரொக்கமாக வழங்க அரசாங்கம் பரிசீலனை 

ஷா ஆலம், அக் 17- ரொக்கப் பணப் பரிமாற்றம் மூலம் மக்களுக்கு நேரடியாக உதவித் தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. வீண் விரயத்தை தடுப்பது மற்றும் அந்நிய நாட்டினருக்குச் சலுகைகள் சென்று சேர்வதை தவிர்ப்பது ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனினும், கோழி, முட்டை போன்ற பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாக இந்த அணுகுமுறையை எல்லா மானியத் திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ரொக்க உதவித் தொகை மாற்றம் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதோடு விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும். வீண் விரயம் மற்றும் வெளிநாட்டினர் இதன் மூலம் பலன் பெறுவதை தவிர்ப்பது ஆகியவை இதற்கு பிரதான நோக்கமாக உள்ளது என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பாயா பெசார் உறுப்பினர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் உதவித் தொகை நேரடியாக மக்களைச் சென்று சேர்வதற்கு ஏதுவாக ரொக்க பரிமாற்ற செயல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முகமது சஹார்  கேள்வி எழுப்பியிருந்தார்.

கோழி மற்றும் முட்டைக்காக மட்டும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 370 கோடி வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்தின் மூலம் 35 லட்சம் பணக்காரர்களும் அந்நிய நாட்டினரும் பயன் பெற்றனர் என்று அன்வார் சொன்னார்.

இதனிடையே, கோழி மற்றும் முட்டையின் விலை குறைவாகவும் சந்தையில் அதிகமாகவும் உள்ள காரணத்தால் அவ்விரு உணவுப் பொருள்களுக்கான சந்தை நிலவரத்திற்கேற்ப விலை நிர்ணய முறை அமல்படுத்தப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :