கோலாலம்பூர், அக் 28- கெந்திங் ஹைலண்ட்ஸ், கோத்தோங் ஜெயாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் டோல் சாவடி மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மற்றும் பொதுப்பணி இலாகாவின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என கூறப்பட்டுள்ளது.
அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாக வெளி வந்த அந்த டோல் சாவடி தனியார் நிலத்தில் நிர்மாணிக்கப்படுவதோடு அந்த சாவடிக்கும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது.
அந்த சாலை கூட்டரசு சாலையாக ஆர்ஜிதம் செய்யப்படாததால் அங்கு மேற்கொள்ளப்படும் டோல் சாவடி நிர்மாணிப்பு பொதுப்பணி இலாகா அல்லது மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்று அவ்வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கும் ஊராட்சி மன்றங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோங் ஷியேபுரா ஓத்மான் முன்னதாக கூறியிருந்தார்.
அந்த டோல் சாவடி நிர்மாணிப்பு தொடர்பில் பெந்தோங் நகராண்மைக் கழகம் மற்றும் பகாங் மாநில அரசு இதுவரை எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை என்றும் இதன் காரணமாக நகராண்மைக் கழகம் பணி நிறுத்த உத்தரவை பிறப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.