கோலாலம்பூர், நவ 2- சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள்
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோவிட்-19 நோய்த் தொற்று
காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின்
பேச்சாளர் கூறினார்.
எழுபது வயதான நஜிப்பின் உடலை நிலை சீராக உள்ளதாகவும் அவர்
இப்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும்
அவரின் உதவியாளரான முகமது முக்லிஸ் மாக்ஹ்ரிப் தெரிவித்தார்.
நஜிப்பிற்கு காய்ச்சல் கண்டதைத் தொடர்ந்து அவர் கடந்த
செவ்வாய்க்கிழமை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்டார்.
1எம்.டி.பி. நிதி தொடர்பான ஊழல் வழக்கில் குற்றவாளி என
நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையை நஜிப் தற்போது
அனுபவித்து வருகிறார்.
பிற தரப்பினருடன் நஜிப் இணைந்து ஆரம்பித்த 1எம்.டி.பி.
நிறுவனத்திலிருந்து அவர் பிரதமரான முதலாவது ஆண்டிலேயே 450
கோடி அமெரிக்க டாலர் வரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அமெரிக்க
மற்றும் மலேசிய விசாரணையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நஜிப்
சிறைவாசம் அனுபவித்து வரும் காலத்தில் வயிற்றுப் புண், உயர் இரத்த
அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்காக அடிக்கடி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.