Budget

டியூஷன் ராக்யாட் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 1 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

ஷா ஆலம், நவ 10 – மாநில அரசின் டியூஷன் ராக்யாட் (பி.டி.ஆர்.எஸ்.) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அடுத்தாண்டு ஒரு கோடி வெள்ளியாக அதிகரிக்கப் படுகிறது.

இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டத்திற்கு இவ்வாண்டில் 70 லட்சம் வெள்ளி வழஙகப்பட்ட வேளையில்  வரும் 2024 ஆம் ஆண்டில் அத்தொகை 30 லட்சம் வெள்ளி அதிகரிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எஸ்.பி.எம். தேர்வை எழுதும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக இன்று மாநில சட்டமன்றத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 65,000 ஐந்தாம் படிவ மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 277 பள்ளிகளில் நடத்தப் பட்ட இந்த டியூஷன் திட்டத்தில் 1,956 ஆசிரியர்கள் பங்கு கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர். பாடத் திட்டம், ஆசிரியர்களுக்கான அலவன்ஸ் மற்றும் மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :