ஷா ஆலம், டிச 6- ஷா ஆலம் மாவட்ட காவல் துறையின் ஏற்பாட்டில் தீபாவளிக் கொண்டாட்டம் நேற்று இங்குள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் டேவான் மாவாரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த தீபாவளி உபசரிப்பில் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது இக்பால் இப்ராஹிம், துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரம்சாய் அனாக் எம்போல், அவரின் துணைவியார் பெகி தோவ் வான் சின், மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் துறைத் தலைவர்கள் மற்றும் காவல் துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த உபசரிப்பு நிகழ்வில் காவல் துறையைச் சேர்ந்த இந்திய உயர் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது அதிகாரிகளும் மற்ற மாவட்ட போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீசாரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பொது மக்களுக்கும் அரச மலேசிய போலீஸ் படை குறிப்பாக ஷா ஆலம் மாவட்ட காவல் துறையினருக்கும் இடையே அணுக்கமான நல்லுறவை வளர்க்கும் நோக்கில் இந்த விருந்துபசரிப்பு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வை டி.எஸ்பி. ஆர்.சந்திரன், டிஎஸ்.பி. வா.கார்த்திகேயன் ஆகியோர் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த இதர இந்திய காவல்துறை உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பல்லின கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட போலீஸ் தலைவர் இக்பால், இத்தகைய சிறப்பான நிகழ்வுகள் வரும் ஆண்டுகளிலும் நடத்தப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.