சிலாங்கூர் லீக் கிண்ண வெற்றியாளராக கோம்பாக் எஃப்.ஏ. வாகை சூடியது

ஷா ஆலம், டிச 11- சிலாங்கூர் லீக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் கம்போங் பாரு போஸ் (எஸ்.சி.எல்.) குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழத்தியதன் வழி 2023ஆம் ஆண்டிற்கான வெற்றியாளராக கோம்பாக் எஃப்.ஏ. குழு வாகை சூடியது.

சுபாங் ஜெயா மாநகர் மன்ற அரேனா அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் கமாருள் அரிபின் ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் வெற்றி கோலை புகுத்தி  கோம்பாக் எஃப்.ஏ. அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக கம்போங் பாரு போஸ் குழுவின் ஆட்டக்காரர் முகமது அமினுக்கு நடுவர் சிவப்பு அட்டையை வழங்கி திடலிலிருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்து அக்குழு 10 பேருடன் ஆட்டத்தைத் தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இப்போட்டியின் வெற்றியாளருக்கு சிலாங்கூர் எஃப்.ஏ. குழுவின் தலைவரான சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா வெற்றியாளர் கிண்ணத்தை வழங்கினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கிய இந்த லீக் கிண்ண ஆட்டத்தில் 16 குழுக்கள் பங்கேற்றன. இந்த ஆட்டம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா எட்டு குழுக்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு குழுவும் தலா ஏழு ஆட்டங்களில் பங்கேற்ற வேளையில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற குழுக்கள் காலிறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றன.

இந்த போட்டியின் வெற்றியாளருக்கு 14,000 வெள்ளியும் இரண்டாம் இடத்தைப் பெறும் குழுவுக்கு 8,000 வெள்ளியும்  ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.


Pengarang :