வருமான உயர்வுக்கு அடித்தளமிடுவோம்; மேன்மக்களாக உயர்வோம்! டத்தோ ரமணன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஷா ஆலம், ஜன 1- இன்று ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் மலேசியர்கள் அனைவருக்கும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஒரு தனிமனிதரிடமிருந்து தொடங்குகின்ற உருமாற்றம், எவ்வாறு ஒரு குடும்பத்தின் வாழ்வியல் முறையை மாற்றியமைக்கிறதோ, அதன் அடிப்படையில் சமூகத்தின் நிலையும் உயர்வடைகிறது.

வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்ற நிலை மாறி, இன்று நம் சமூகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது; அதனூடே நம் இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகளும் மேன்மையுற்று வருவதை காண முடிகிறது.

இத்தகைய உருமாற்றமானது, வறிய நிலைக் குடும்பங்களிலும் நிகழ வேண்டும்! பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கமும் இதனைக் கருத்தில் கொண்டுதான் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கு வித்திடும் திட்டங்களை அதிகம் செயல்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சும் சிறு குறு நடுத்தர வியாபாரிகளை உருவாக்குவதிலும், அவர்களை வெற்றிப் பெற்ற வர்த்தகர்களாக உருமாற்றுவதிலும் அதிக முனைப்பு காட்டி வருகின்றது.

குறிப்பாக தெக்குன் கடனுதவி உட்பட இன்னும் பல பொருளாதார ஏஜென்சிகள் இந்திய சிறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு உதவி செய்து வருகின்றன. இப்புத்தாண்டில், இது தொடர்பான விழிப்புணர்வை இந்திய மக்களிடம் ஏற்படுத்தி, அதிக வருமானம் ஈட்டும் தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமது அமைச்சு முழு ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதன் வழி, 2024ஆம் ஆண்டில் நம் சமூகத்தில் இன்னும் அதிகமான உயர் வருமானம் பெறக்கூடியவர்களை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த கெஅடிலான் கட்சியின் தேசிய தகவல் பிரிவு துணைத் தலைவருமான அவர், தமது இந்த இலக்கு நோக்கிய பயணத்தில் இணைந்து எல்லா மாநிலங்களிலும் பொதுச் சேவையாற்ற கட்சித் தொண்டர்களும் அரசு சாரா அமைப்புகளின் நிர்வாகிகளும் தோள் கொடுக்க முன் வரலாம் என அழைப்பு விடுத்தார்.

வேற்றுமைகளை வேரறுத்து, சமூக மேன்மைக்கு வித்திடும் செயலாக்கப் பணிகளில் களமிறங்குவோம்; புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என தமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


Pengarang :