எழுத்து; சு.சுப்பையா
இவ்வாண்டு தைப்பூச திருவிழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மடாணி அரசு ஆட்சியில் கெடா முதல் ஜொகூர் வரை எல்லா மதமும், எல்லா இனமும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை மெய்பித்துள்ளது இந்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டம்..
மலேசிய தைப்பூசம் அரசின் முழு ஒத்துழைப்போடு இவ்வாண்டுப் போல் முன்பு என்றும் கொண்டாடப்படவில்லை. வெற்றிகரமாக ஒற்றுமையாக, மடாணி அரசின் கொண்டாட்டம் தனித்துவமாக அமைந்திருந்தது.
பத்துமலை முருகன் திருக்கோவிலுக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மனித வளத்துறை அமைச்சர் ஸ்டிபன் சிம், மின்னியல் துறை அமைச்சர் கோபிந் சிங் டியோ, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி போன்று முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர இங்கு வந்து பத்துமலை தைப்பூசத்தை ஒரு அரசு விழா மாதிரி ஆக்கிவிட்டனர்.
இந் நாட்டில் எல்லா மக்களின் ஆதரவையும் பெற்று 22 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் சுகம் கண்ட பெரிச்சாலி, இன்று இந்தியர்களின் தேச விசுவாசம் மீது கேள்வி எழுப்பியுள்ளது, மறுபுறம் ஒரு சாரார் நம் சமய விழாக்களை சிறுமைப்படுத்தும் ரீதியிலும், நமது பெருநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது கூட அவர்களின் சமயத்திற்கு இழிவு என பிரச்சாரம் செய்து வரும் வேளையில், சிலாங்கூர் அரச தம்பதிகள் மட்டுமின்றி நாட்டின் பேரரசர் முதல் பிரதமர், துணை பிரதமர் மற்றும் பல அமைச்சர்களும் தைப்பூசத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்.
மேலும் தைப்பூச பண்டிகைக்கு பத்துமலை மற்றும் பினாங்கு தண்ணீர் மலை கோவிலுக்கு சென்று திரும்ப, பக்தர்களுக்கு இரண்டு நாட்கள் இலவச ரயில், பெரி மற்றும் பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் வழங்கியதை நமது மக்கள் கொண்டாடத் தவறவில்லை. இவை அனைத்தும் நமது பண்டிகைக்கு கிடைத்த தேசிய அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள்.
ஒரு இந்தியர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் கூட நமக்கு வழங்கப்படாத அங்கீகாரத்தை மடாணி அமைச்சர்கள் வழங்கியது, மலாய்க்காரர் அல்லாத மக்கள் மீது மடாணி அரசு கொண்டுள்ள நன்மதிப்பின் அடையாளமாக இந்தியர்கள் பார்க்க தொடங்கி விட்டனர். எதுவானாலும் இது ஒரு கௌரவமே என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
அது மட்டுமன்றி பத்துமலையில் வழங்கப்பட்ட திவேட் கல்வி, ஏழ்மை ஒழிப்பு உதவித்திட்டங்கள் பாடு, சாரா பதிவு திட்டங்கள் போன்ற பல மக்கள் நலத் திட்டங்களை இந்திய மக்கள் அதிகம் ஒன்று கூடும் பத்துமலையில் நடத்தியது, மக்களை தேடி மடாணி அரசாங்க திட்டங்களை முன்னெடுத்து வருவதற்கான இன்னொரு ஆதாரம். இவை அனைத்தும், மலேசிய இந்தியர்கள் மீது அரசாங்கம் கொண்டுள்ள நல்ல அபிமானத்தை, கரிசனத்தை காட்டுவதாக அமைந்துள்ளது
மத்திய அரசின் அனைத்து அமைச்சுக்களும், மாநில அரசின் அனைத்து இலாகாகளும் இணைந்து ஒரு மகத்தான சேவையை வழங்கி தைப்பூச விழாவிற்கு ஒரு புதிய பொழிவை வழங்கியுள்ளது.
தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என்ற மனக்குறையை போக்கும் வண்ணம் மற்றவர்கள் அந்த இடத்தை சிறப்பாக நிரப்பி உள்ளனர் என்றால் மிகையாகாது.பெரும்பான்மையான தமிழர்களின் மனக்குறையை மடாணி அரசு நல்ல முறையில் தீர்த்து வைத்துள்ளது.
இந்தியர்களின் அரசியல் உரிமையை இந்தியர்கள் பேச வேண்டும் , தீர்வு காண வேண்டும் என்று கடந்த 66 ஆண்டுகளாக இருந்து வந்த அரசியல் பாரம்பரியத்தை தகர்த்தெறிந்த தைப்பூசக் கொண்டாட்டம் இது என்றால் அது மிகையாகாது.
ஆம், மடாணி அரசு நாட்டில் உள்ள எல்லா மக்களுக்குமான அரசு என்பதை இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் தெளிவு படுத்தியுள்ளதை தமிழ் மக்கள் கண்டனர்.
மலேசிய இந்தியர்கள் புதிய அரசியல் பரி நாம வளர்ச்சியை நோக்கி ஒற்றுமையாக மலேசியர்களாக செயல் படுவோம். நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு தொடர்ந்து பாடுபடுவோம். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி ஆட்சியை தற்காப்போம். நாட்டு வெற்றியில் பங்கு கொள்வோம்.