NATIONAL

பூச்சோங்கிலுள்ள தொழிற்சாலையில் எரிவாயு வெடிப்பு- இருவர் பலி, இருவர் காயம்

கோலாலம்பூர், பிப் 23 – பூச்சோங் உத்தாமா தொழில் பேட்டையில் உள்ள
தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் இருவர்
உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயங்களுக்குள்ளாயினர்.

இந்த சம்பவம் தொடர்பில் தாங்கள் இன்று காலை மணி 10.14 அளவில்
அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி அதிகாரி அகமது முக்லிஸ்
மொக்தார் கூறினார்.

பூச்சோங், சுபாங் ஜெயா மற்றும் சைபர் ஜெயா தீயணைப்பு
நிலையங்களிலிருந்து 16 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது எஸ்திலெனா எரிவாயு சம்பந்தப்பட்ட
வெடிப்புச் சம்பவம் அந்த தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ளது
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் நால்வர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த தொழிற்சாலையில் பரவியுள்ள வாயுவை
வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :