பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 – போலிஸ்ட்ரின் மற்றும் ஒரு முறை
பயன்படுத்தக்கூடிய, பயன்படுத்தி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகளின்
பயன்பாட்டைக் குறைப்பதற்கான இதர சாத்திய தீர்வுகளை மாநில அரசு
ஆராய்ந்து வருவதாகச் சுற்றுசூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் அல்லது மக்கும்
திறன் கொண்ட மாற்றுப் பொருள்களின் பயன்பாடு தொடர்பில் வணிகத்
துறைகளைச் சம்பந்தப்படுத்திய சட்டங்களில் திருத்தம் செய்வது மற்றும்
புதிய வழிகாட்டிகளை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டு
வருகின்றன என்று அவர் சொன்னார்.
எனினும், இத்தகை விதிமுறைகளை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள
ஊராட்சி மன்றங்கள் உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைப்
பெற வேண்டியுள்ளதால் இந்த முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதற்குக்
கால அவகாசம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்.
போலிஸ்ட்ரின் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய
பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வதற்குப் பிரத்தியேகச் சட்டங்கள்
இல்லாததைக் கருதில் கொண்டு அதனை அமல் செய்து தொடர்பில்
மாநில சட்ட ஆலோசகருடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என்றார்
அவர்.
அதன் காரணமாகவே தற்போது நாங்கள் விழிப்புணர்வு இயக்கங்களை –
(போலிஸ்ட்ரின் மற்றும் பயன்படுத்தி எறியக்கூடிய பிளாஸ்டிக்)
அதிகளவில் நடத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று
அவர் இன்று இங்குள்ள அசுந்தா மருத்துவமனையில் மகப்பேறு மற்றும்
மகளிர் நோய் மருத்துவ மையத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.