ஷா ஆலம், ஏப் 11- சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான (பி.கே.பி.எஸ்.) ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை (ஜே.இ.ஆர்.) நேற்று தொடங்கி எட்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் இத்திட்டம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மீண்டும் நடைபெறும் என்று முகநூல் மூலம் அக்கழகம் அறிவித்துள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜே.இ.ஆர். விற்பனைக்கு வரும் ஏப்ரல் 8 முதல் 15 வரை ஓய்வு வழங்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 16 செவ்வாய்கிழமை தொடங்கி
மலிவு விற்பனை மீண்டும் தொடங்கும் என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் செகி ஃப்ரெஷ் பேரங்காடியுடன் இணைந்து நடத்தப்படும் மலிவு விற்பனை நீங்கலாக இவ்வாண்டு 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் வழி மற்றும் விற்பனைச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://linktr.ee/myPKPS இணைப்பின் மூலமாகவும் சரிபார்க்கலாம்.