NATIONAL

மூன்றாவது ஒத்திகையின் போது  ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாயின- அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், ஏப் 23 – அரச மலேசிய கடற்படைத்  தளத்தில் இன்று காலை விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்கள் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெறத்  திட்டமிடப்பட்ட  கடற்படையின்  திறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு  மூன்றாவது முறையாக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன.

இந்த விபத்தில்  பேராக் மாநிலத்தின் லுமுட் மற்றும் சபா மாநிலத்தின் கோத்தா கினாபாலு ஆகிய தளங்களைச் சேர்ந்த  10 கடற்படை  உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

இரு கடற்படை ஹெலிகாப்டர்கள் சம்பந்தப்பட்ட  இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய அரச மலேசிய கடற்படை ஒரு விசாரணை வாரியத்தை அமைக்கும் என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்   விசாரணை செயல்முறையை பாதிக்காத வகையிலும்  இந்த சம்பவத்தின் காணொளியை  பொதுமக்கள் பகிர மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர்  குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள கெமெந்தே முகாமில் அமைச்சின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களின்  உடல்கள் லுமுட் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் நீச்சல் குளம்  மற்றும்  மைதானத்தின் காலியான பகுதியில் விழுந்ததால்  ஒத்திகை நிகழ்வில் கலந்து கொண்ட மற்ற யாருக்கும்  இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல்களை அடையாளம் காண்பதில் உதவுவதற்காக சபா, கோத்தா கினாபாலு கடற்படைத்  தளத்தில் இருப்பவர்களை அமைச்சு பேராக்கின் லுமுட்டுக்கு அழைத்து வரும் என்றார் அவர்.


Pengarang :