புத்ராஜெயா, மே 21 – முடத்தன்மை அனுகூலத் திட்டத்தை வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நீட்டிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
நேற்று, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுடன் தாம் கூட்டாக தலைமையேற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் மேலாண்மைக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த முடத்தன்மை அனுகூலச் சட்டத்தின் விரிவாக்கம் 1969ஆம் ஆண்டு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்திற்கேற்ப (சட்டம் 4) அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த சட்டம் 4இன் கீழ் உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையிட விபத்து திட்டம் மற்றும் முடத்தன்மை அனுகூலத் திட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். அதேசமயம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலையிட விபத்து திட்டத்தின் கீழ் மட்டுமே பாதுகாப்பளிக்கப்படுகிறது.
நேற்றைய கூட்டத்தில் சமூக பாதுகாப்பு முடத்தன்மை அனுகூலத்தை நாட்டிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் நீட்டிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. வேலையிடத்தில் மட்டுமின்றி அதற்கு அப்பாலும் விபத்துகளால் ஏற்படும் முடத்தன்மை மற்றும் மரணத்திற்கு இத்திட்டம் 24 மணி நேர பாதுகாப்பை வழங்குகிறது.