NATIONAL

பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் மரணம்

காஸா, ஜூன் 6 – குடியிருப்புகளை இழந்தவர்கள் அடைக்கலம் நாடி இருந்த பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமுற்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.

அந்த பள்ளியில் உள்ள மூன்று வகுப்பறைகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் எறிபடைத் தாக்குதல் நடத்தியதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஷின் ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலின் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்த ஹமாஸ் இயக்கத்தினால் நடத்தப்படும் காஸா அரசாங்கம் ஊடக அலுவலகம், மிக மோசமான இனப் படுகொலை இதுவாகும் எனக் கூறியது.

இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் இத்தகையத் தாக்குதல்கள் பொது மக்களுக்கு எதிராக அந் நாடு நடத்தி வரும் இனப்படுகொலையை தெளிவாக உணர்த்துகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.


Pengarang :