கோலாலம்பூர், ஜூன் 30 – சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களைச் சந்திப்பதற்கான தனது கோரிக்கைக்கு மேன்மை தங்கிய சுல்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக மலேசிய கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எம்.) தலைவர் டத்தோ ஹமிடின் முகமது அமின் தெரிவித்தார்.
இதனை ஆட்சியாளரின் தனிச் செயலாளர் டத்தோ முகமட் முனீர் பானி நேற்று முன்தினம் மதியம் தம்மிடம் தெரிவித்ததாக ஹமிடின் கூறினார்.
சுல்தானை சந்திக்க அனுமதி கேட்டு நான் கடிதம் அனுப்பிய ஒரு தினத்திற்கு பிறகு, அதாவது கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் டத்தோ (முகமது) முனீரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
கடந்த வியாழன் மதியம் ஷா ஆலம், இஸ்தானா புக்கிட் கயாங்கான் அரண்மனைக்கு நான் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, தன்னைச் சந்திப்பதற்கான கோரிக்கையை ஏற்குமாறு ஆட்சியாளர் அவருக்கு (டத்தோ முகமது முனீர்) உத்தரவிட்டுள்ளார் என்று ஹமிடின் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு ஜூலை 7ஆம் தேதிக்குப் பிறகே நடைபெறும் என்று பிஃபா மன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
எல்லாம் சரியாக நடந்தால், தங்கிய சிலாங்கூர் சுல்தான் உடனான சந்திப்பு தேதி ஜூலை 7ஆம் தேதிக்குப் பிறகு நிர்ணயிக்கப்படும். ஆட்சியாளர் சரவாக்கிலிருந்து திரும்பி, அவர் கலந்து கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் கடமைகள் முடித்தவுடன் இச்சந்திப்பு நடைபெறும் என அவர் சொன்னார்.
ஜோகூர் டாருள் தாக்ஸிம் குழுவுடனான ஷேரிட்டி ஷீல்ட் போட்டியில் விளையாடத் தவறியதற்காக சிலாங்கூர் குழுவுக்கு விதிக்கப்பட்ட 100,000 வெள்ளி அபராதத்தை மலேசிய கால்பந்து சம்மேளனம் 60,000 வெள்ளியாக கடந்த வியாழக்கிழமை குறைத்தது. மேலும், 2024/2025 சூப்பர் லீக்கில் மூன்று புள்ளிகளைக் கழிக்கும் முடிவையும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் ஜோகூர் குழுவுடன் ரசிகர்கள் இன்றி ஆட வேண்டும் என்ற உத்தரவையும் அது மீட்டுக் கொண்டது.