NATIONAL

எலி விஷம் கலந்த உணவு பண்டத்தை சாப்பிட்ட சிறுவன் மரணம்

கூலிம், ஜூலை 10: கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போங் பாடாங் உபி, லபு பெசார், கூலிமில் எலி விஷம் கலந்திருந்ததாக நம்பப்படும் உணவு பண்டத்தை சாப்பிட்ட இரு சகோதரர்களில் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

இன்று காலை 8.30 மணி அளவில் முகமட் அகில் சௌகி நூர் சுஃபியான் (3) பினாங்கு மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூலிம் மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் அஜிசுல் முகமட் கைரி தெரிவித்தார். மேலும், முகமட் லூத் சயுகி (2) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்பு, இரண்டு சகோதரர்கள் எலி விஷம் கலந்த உணவு பண்டத்தை உண்டதால் அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், நேற்று காலை 11 மணியளவில் தனது குழந்தைகள் வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியதைக் கண்டதையடுத்து இச்சம்பவத்தை அவர்களின் தாயார் அறிந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அவர்களின் வீட்டின் அருகே உள்ள தோட்ட வேலியை சுற்றியுள்ள இரும்பு கம்பியில் குரங்குகளைப் பிடிக்க தொங்கவிடப்பட்டிருந்த எலி விஷம் அடங்கிய உணவு பண்டத்தை சகோதர்கள் இருவரும் உண்டதாக நம்பப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :