கங்கார், ஜூலை 14- நாடு முழுவதும் கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 4,110 அக்ரோ மடாணி விற்பனை நிகழ்வுகள் மூலம் வாடிக்கையாளர்கள் 2 கோடியே 70 லட்சம் வெள்ளியை சேமிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியது.
அந்த விற்பனைத் திட்டத்தில் மொத்தம் 46,838 உள்ளூர் தொழில்முனைவோர் ஈடுபட்டதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (மேம்பாடு) டத்தோ பட்ருல் ஹிஷாம் முகமது கூறினார்.
இந்த மடாணி அக்ரோ விற்பனையின் மூலம் பயனீட்டாளர்கள் நியாயமான விலையில் புதிய உற்பத்திப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை பெறும் அதேவேளையில் விற்பனை அதிகரிப்புக்கும் பங்களிக்கும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இங்கு நடைபெறும் பெர்லிஸ் மாநில அளவிலான மெகா மடாணி வேளாண் விற்பனைத் விழாவின் தொடக்க நிகழ்வை முன்னிட்டு அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டது. விவசாயம், தோட்டம் மற்றும் உணவுத் தொழில் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரசாலி சாட்டுடன் இணைந்து பட்ருல் ஹிஷாம் இந்நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாயச் சந்தை வாரியத்தின் பெர்லிஸ் மாநில இயக்குனர் முகமது அன்சாரா அஜிசானும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்