கோலாலம்பூர், ஜூலை 15 – மானியங்கள் மூலம் செம்பனை மறு நடவுத் திட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு திட்டமிடவில்லை என்று தோட்ட தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், சிறு விவசாயிகளுக்கு செம்பனை மறு நடவுக்கான நிதியுதவித் திட்டத்தை ஹைபிரிட் முறையில் அதாவது பாதி மானியமாகவும் மீதி கடனுக்காகவும் மேற்கொள்ள அரசாங்கம் 10 கோடி வெள்ளியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது என்று அதன் துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் கூறினார்.
மொத்தம் 5,900 ஹெக்டேர் பரப்பளவிலான இந்த மறு நடவு திட்டத்தின் மூலம் சுமார் 1,500 செம்பனை சிறு தோட்டக்காரர்கள் பயனடைவார்கள் என்று அவர் சொன்னார்.
செம்பனைத் துறையில் தங்கள் வருமானம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க சிறு நில உடமையாளர்களுக்கு இந்த ஒதுக்கீடு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று மக்களவையில் அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்.
செம்பனை தோட்டக்காரர்களுக்கு கடன் திட்டத்திற்கு பதிலாக மறுநடவு மானியத் திட்டத்தை அரசு மீண்டும அமல்படுத்துமா என பாசீர் சாலாக தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஜமாலுடின் யாஹ்யா கேள்வியெழுப்பியிருந்தார்.