SELANGOR

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆடாம் சஃபியான் நியமனம்

ஷா ஆலம், ஜூலை 16 – பென்குருசன் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்முறை  அதிகாரியாக ஆடாம் சஃபியான் கசாலி  நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்தாண்டு  ஜனவரி 1 முதல் இவ்வாண்டு ஜூன் 30 வரை  தலைமை செயல்முறை  அதிகாரியாகப் பணியாற்றிய  அபாஸ் அப்துல்லாவுக்குப் பதிலாக ஆடாம் சஃபிய்ன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆயர்  சிலாங்கூர்  நிறுவனம்  அறிக்கை ஒன்றில் கூறியது.

நீர் சேவை மற்றும்  அடிப்படைப் பயன்பாட்டுத் துறையில் 24 வருட அனுபவத்தை ஆடம் சஃபியான் கொண்டுள்ளார். அலிரான் ஏஹ்சான் ரிசோர்சஸ் பெர்ஹாட்  சிறப்புத் திட்டப் பொது மேலாளர் மற்றும் ஆலம் புளோரா சென். பெர்ஹாட் தலைமைச் செயல்முறை அதிகாரி ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

மேலும் அவர், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு வரி விதிப்பில் முதுகலைப் பட்டமும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

இதனிடையே, ஆயர்  சிலாங்கூர் நிறுவனத்தில்  சேர  தாம் ஆவலுடன் இருப்பதாகவும்  சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள 93 லட்சம் பயனீட்டாளர்களுக்கு  ஒவ்வொரு சொட்டு நீரும் அர்த்தமுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் ஆடாம் சஃபியான் கூறினார்.

சேவையின் தரத்தை மேம்படுத்துவது,  புதுமையான அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நிலையான நீர் மேலாண்மையை உறுதிசெய்வது ஆகியவற்றில் நாங்கள் ஒன்றாக கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்தார்.


Pengarang :