MEDIA STATEMENT

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞர் நீரில்  மூழ்கி மரணம்

கோலாலம்பூர், ஜூலை 20- நண்பர்களுடன்  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞர் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் பூச்சோங் கம்போங் பூங்கா மெராந்தி, ஜாலான் மெராந்தி 2, சாலையிலுள்ள ராவாவ் ஆற்றில் நேற்று நிகழ்ந்தது.

அந்த இளைஞர் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது தொடர்பில் நேற்று மாலை 4.41 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த 14 வயது சிறுவன் நான்கு நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

தேடி மீட்கும் பணியில் ஷா ஆலம் மற்றும் கோலக் கிள்ளான் தீயணைப்பு நிலையங்களைக் சேர்ந்த குழுவினரும் உதவினர் என்றார் அவர்.

அச்சிறுவனின் சடலம் அவர் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் மாலை 6.36 மணியவில் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.


Pengarang :