MEDIA STATEMENT

நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இளம் ஜோடி மரணம்

கோல திரங்கானு,  ஜுலை 28-   இன்று அதிகாலை இங்குள்ள ஜாலான் கெமாஜூவானில் நிகழந்த  நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் வருங்கால தம்பதியர்  உயிரிழந்தனர்.

விடியற்காலை 3.11 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் திரங்கானுவைச் சேர்ந்த முகமது ஹனிப் இடாம் முகமது அஸ்மி (வயது 24) மற்றும் நூர்ஷாபிரா இஸ்ஸானி சஜூல்கர்னைன் (வயது  22) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

முகமது ஹனிப் இடாம் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி காரை  பின்னால் வந்த  மீட்புக் குழுவின் நான்கு சக்கர இயக்க வாகனம் மோதியதாக  கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நோர் கூறினார்.

இந்த மோதலின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த மைவி கார் சாலையின் மத்தியில்  உள்ள அலங்கார மரத்தை மோதி சாலையின் அடுத்தத் தடத்தில் நுழைந்தது என்று அவர் தெரிவித்தார்.

அப்போது எதிர்த் தடத்தில் வந்து கொண்டிருந்த எஸ்.யு.வி. வாகனம் மைவி காரின் வலது புறத்தை மோதியது. அதன் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் அந்த எஸ்.யு.வி. வாகனத்துடன்  மோதியது என அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது குறிப்பிட்டார்.

இவ்விபத்தில் காயமடைந்த சம்பந்தப்பட்ட தம்பதியர் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அங்கு  அவர்கள் உயிரிழந்து  விட்டது உறுதி செய்யப்பட்டது என அவர் கூறினார்.


Pengarang :