NATIONAL

மூன்றாம் தரப் பிரஜைகள் என்று யாருமில்லை- அரசியலமைப்புச் சட்டப் படி நாம் அனைவரும் சமமே- மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூலை 29- இந்நாட்டில் மூன்றாம் தரப் பிரஜைகள், இரண்டாம் தரப் பிரஜைகள் என்று யாரும் இல்லை எனக் கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அனைவரும் சமமே என உறுதிபடத் தெரிவித்தார்.

அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதி செய்வதும் அந்த உரிமையை மீட்டுத் தருவதும் மாநில அரசின் நடப்பு தலைமைத்துவத்தின் கடமையாகும் என்றும் அவர் சொன்னார்

உரிமைகளை உறுதி செய்வதில் சரும நிறம், அரசியல் சித்தாந்தம், சமய வேறுபாடு மற்றும் இதர வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப் படாது.இதுதான் மாநில அரசின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.

மைசெல் பிரிவின் ஏற்பாட்டில் இன்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அடையாள ஆவணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மாநில மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளையும் மாநில அரசின் திட்டங்களின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும் பெறுவதிலிருந்து விடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடந்த 2008ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செல் அமைப்பை மாநில அரசு நிறுவியதாக அவர் சொன்னார்.

அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் பல சிக்கலை எதிர் நோக்குவதற்கு குடும்பச் சிக்கல்கள், அறியாமை மற்றும் மலாய் மொழியில் திறன் பெற்றிராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளில் அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம் போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கு 6,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெற்றப்பட்ட வேளையில் அவற்றில் சுமார் 2,000 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதன் மூலம் 2,000 பேர் அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கும் கல்வி, வேலை வாய்ப்பு, அரசாங்கச் சலுகைகளில் உரிய வாய்ப்புகளை  பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர்.

மாநில மக்கள் அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு உதவும் நோக்கில் மாநில அரசு முன்னெடுத்துள்ள இந்த திட்டம் தேசிய பதிவுத் துறையின் பணிகளை கையில் எடுத்துக் கொண்டதாக பொருள்படாது. அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு தேவையான ஆவணங்களைப் தயார் செய்வதில் மட்டுமே மாநில அரசு உதவும். மற்றபடி சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டப் பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு அடையாளப் பத்திரங்களை வழங்கும் தேசிய பதிவுத் துறை வழங்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.

அந்நிய நாட்டினரை நாட்டின் குடிமக்களாகவும் மலாய்க்காரர்கள் அல்லாதோரை அதிகளவில் பிரஜைகளாகவும் ஆக்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக  சில தரப்பினர் கூறி வருவதை நிராகரித்த அவர், அடையாளப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களை தேசிய பதிவுத் துறை விரிவான பரிசீலனைக்குப் பின்னரே அங்கீகரிப்பதோடு விண்ணப்பதாரர்களில் மலாய்க்காரர்களும் மற்ற இனங்களுக்கு ஈடான அளவில் உள்ளனர் என்றார்.


Pengarang :