கோலாலம்பூர், ஜூலை 30: அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாகக் கடந்த ஜூலை 25ஆம் தேதி வாட்ஸ்அப் செயலியில் எந்த செய்தியும் வெளியிடவில்லை என நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், அச்செய்தி போலியானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளால் எளிதில் ஏமாந்துவிடாமல் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் நிதியமைச்சகம் தனது சமூக ஊடகக் கணக்கு மூலம் அறிவுறுத்தியுள்ளது.
“சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களுக்குப் போர்ட்டலைப் பார்வையிடவும் மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களைப் பின்தொடரவும்” என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு 13 சதவீத சம்பள உயர்வைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
– பெர்னாமா