செப்பாங், டிசம்பர் 23:
சிலாங்கூர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டு ரிம 6.5 பில்லியன் வருமானத்தை ஈட்டியிருக்கும் என்றும் சுமார் 7.4 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளதாக மாநில பண்பாடு, சுற்றுலாத்துறை, மலாய் நாகரிகம் மற்றும் பாரம்பரிய ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அஸாரி கூறினார். கடந்த 2017-இல் சுற்றுலாத்துறை ரிம 5.8 பில்லியன் வருமானத்தை ஈட்டியதோடு 7.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர் என அவர் தெரிவித்தார். ஆகவே, சிலாங்கூர் மாநில சுற்றுலாத்துறை வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
” சிலாங்கூர் மாநிலம் மலேசியா நாட்டின் நுழைவாயில். இதற்கு காரணம் கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கெஎல்ஐஏ) சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ளதே ஆகும். சிலாங்கூர் மாநிலத்தில் பொருளாதார சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு துறைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும்,” என்று கெட்வே@கெஎல்ஐஏ – இல் நடைபெற்ற செப்பாங் நகரத்திற்கு வருகை புரியும் ஆண்டு 2020-இன் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.