கோலாலம்பூர், ஜன.15:
350 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள முக்கியம் இல்லாத வணிகங்களை அகற்றும் திட்டத்தை தோட்டத் தொழில் நிறுவனமான ஃஎப்ஜிவி ஹோல்டிங்ஸ் அறிவித்ததோடு புர்சா மலேசியாவில் அதன் பங்கு மதிப்பும் உயர்ந்தது.
எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் பங்கின் விலை 85 காசு உயர்ந்து 954 மில்லியன் வெள்ளி பங்கு பரிவர்த்தனையை இன்று காலை 10.04 மணிக்கு பதிவு செய்தது.
நிறுவனத்தை மேம்படுத்தும் துறைகளையும் அதன் ஆற்றலை வலுப்படுத்த அல்லது பலவீனங்களை நிவர்த்தி செய்யக்கூடிய வியூகங்களையும் தாங்கள் கண்டறிந்துள்ளதாக எஃப்ஜிவி நிறுவனத்தின் நிர்வாகி டத்தோ வீரா அஸார் ஹமிட் கூறினார்.
அதேவேளையில், முதலீட்டு மூலதனத்தையும் செலவினங்களையும் தற்போது அது மறு ஆய்வு செய்து வருகிறது. இது தவிர்த்து, இந்நிறுவனத்தின் மனித ஆற்றல் அளவை மறு மதிப்பீடு செய்து வருகிறது.
நிறுவனத்தில் காணப்படும் பலவீனம் மற்றும் திறமையற்ற நிர்வாகம் போன்றவற்றைக் களைவதன் மூலம் 2019ஆம் ஆண்டு சுமார் 150 மில்லியன் வெள்ளியை சேமிக்கலாம் என்று எஃப்ஜிவி புர்சா மலேசியாவுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ளது.