ஷா ஆலம், மே 20-
பூமிபுத்ரா மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் மெட்ரிகுலேஷன் திட்டத்தை இனரீதியாகப் பார்க்கக்கூடாது. மாறாக, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேணவும் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ துறையில் அனைத்து இனங்களும் சரிசமமான அளவில் ஈடுபடுவதையும் உறுதிசெய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ துறைகளில் ஈடுபடுவோரில் இனங்கள் அடிப்படையிலான புள்ளி விபரப்படி பூமிபுத்ராக்கள் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் என்று மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முகமது அஸ்ராட் காசிம் கூறினார்.
“எடுத்துக்காட்டாக, மலேசிய மருத்துவ மன்றத்தின் புள்ளி விபரத்தின்படி 2018ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மருத்துவர்களில் பூமிபுத்ராக்கள் 24,891 பேர் என்றும் இதர இனத்தவர்கள் 48,228 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல், பொறியியல் துறையில் 36,024 பூமிபுத்ராக்கள் ஈடுபட்டுள்ள வேளையில் 101,478 பேர் இதர இனங்களைச் சேர்ந்தவர்கள் என்று மலேசிய பொறியியல் வாரியம் வெளியிட்ட 2017ஆம் ஆண்டு புள்ளிவிபரம் காட்டுகிறது” என்றார் அவர்.
இனங்களுக்கு மத்தியில் பதற்றம் மற்றும் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த இடைவெளியைக் குறைப்பது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.