ஜாகர்த்தா, மே 23-
இந்தோனேசிய பொதுத் தேர்தலின் முடிவில் அதிருப்தியுற்ற தரப்பினர் நடத்தி வரும் ஆட்சேப போராட்டங்களைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக ஊடகங்கள் அந்நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட கலவரங்களில் அறுவர் கொல்லப்பட்டதோடு பெருமளவிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதால், நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வதந்திகள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இந்தோனேசிய அரசியல் துறை ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் விராந்தோ கூறியதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.
இதனிடையே, கலவரங்கள் மோசமடைந்துள்ளதால், கோத்தா ஜாக்கர்த்தா சுற்றுப் புறப் பகுதிகளில் இந்தோனேசிய அரசாங்கம் 40 ஆயிரம் பாதுகாப்புப் படையினரைக் குவித்துள்ளனர் என்றும் அது கூறியது.