புத்ராஜெயா, ஜூலை 1:
அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகப் புரிந்திட சகிப்புத் தன்மை, மனித நேயம் ஆகியவற்றோடு மாற்றங்களை ஏற்கும் மனப் பக்குவத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் நண்பர் அல்லது எதிரிகளின் தலையீடுகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும். எனவே, நம்மைச் சுற்றி அமைதி நிலவுவதற்கு நம்மிடம் சகிப்புத் தன்மை இருப்பது அவசியமாகிறது என்றார் அவர்.
“நம்மிடம் சகிப்புத் தன்மையும் மனித நேயமும் இல்லையென்றால், பலவகையான மனிதர்கள் பணிபுரியும் ஓர் அமைப்பில் சிறப்பாக பணிபுரிவது கடினமாகும்” என்றார்.
அதேவேளையில், நமது மேலதிகாரிகள் மற்றும் நமக்கு கீழ் பணியாற்றுவோரின் ஒத்துழைப்பு இல்லாமல் நமது கடமைகளை நம்மால் சிறப்பாக நிறைவேற்ற இயலாது என்று பிரதமர் துறை பணியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது மகாதீர் குறிப்பிட்டார்.