டெங்கில், ஆகஸ்ட் 13:
சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு செயல்திட்டத்தின் கீழ் இயந்திர தளவாடங்கள் பெற்றுக் கொண்ட மக்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் கேட்டுக் கொண்டார். வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வாங்கப்பட்டது என்று அவர் அறிவுறுத்தினார்.
” இந்த இயந்திர தளவாடப் பொருட்களை உங்களுக்கு வழங்க ஏற்பாடு மேற்கொண்ட கிராமத்து தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகள், அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அனைத்தும் வீணாகி விடும்.
” மக்கள் வரிப்பணம் மூலம் பெறப்படும் இந்த உதவிகளை நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ளுங்கள்,” என்று 2019-ஆம் ஆண்டிற்கான செப்பாங் மாவட்டத்திற்கான வறுமை ஒழிப்பு செயல்திட்டத்தின் கீழ் இயந்திர தளவாடங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமது உரையில் இவ்வாறு கணபதி ராவ் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் டெங்கில் சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளருமான பொர்ஹான் அமான் ஷா மற்றும் செப்பாங் மாவட்ட அதிகாரி முகமட் யாஸிட் ஷாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
73 பேர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றது குறிப்பிடத்தக்கது. ரிம 301,250 மதிப்பிலான தையல் இயந்திரம் , குளிர் சாதன பெட்டி, சமையல் அடுப்பு மற்றும் தேங்காய் பூ பிழியும் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது என கணபதி ராவ் தெரிவித்தார்.