கிள்ளான், நவ.19-
சிலாங்கூரில் உள்ள நீர் தேக்க குளத்தை சீரமைப்பதற்காக இவ்வாண்டு மொத்தம் 9.5 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் பழுது மற்றும் தேவை அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநில வடிகால் மற்றும் நீர் பாசன துறை துணை இயக்குநர் இஞ்சினியர் சாரி அப்துல்லா கூறினார்.
தூர் மற்றும் குப்பை அகற்றுதல், குளத்தின் கரையை சீர்படுத்துதல், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை சீரமைத்தல், கால்வாயைச் சீரமைத்தல், குப்பைகளை தடுக்கும் சாதனம் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
இக்குளம் ஜேபிஎஸ்சுக்கு சொந்தமான குளமாக இல்லாவிட்டாலும் இதனை ஆண்டுதோறும் சீரமைப்பதும் பராமரிப்பதும் அவசியம் என்பதால் இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
2016ஆம் ஆண்டு தொடங்கி கூட்டரசு அரசாங்கம் வழங்கும் நிதி ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு இவ்விலாகாவிற்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டும் இப்பனி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.