கோலாலம்பூர், நவ.21-
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு குறைந்தபட்ச பங்கேற்பாளர் எண்ணிக்கை இல்லாத நிலை ஏற்படுவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கு குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் இன்று வினவப்பட்டது.
இது முதல் தடவையாக நடைபெறவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தாம் விவாதிக்கவிருப்பதாக அவர் சொன்னார்.
இது குறித்து எம்பிக்களுடன் பேச வேண்டும், வேட்பாளராகத் தேர்வு பெறுவதில் பெரிதும் ஆர்வமாய் இருக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு சேவையாற்றுவதில் கவனம் செலுத்தத் தவறுகின்ற போக்கை கொண்டுள்ளனர் என்று மலேசியா @ வேர்க் என்ற இயக்கத்தை தொடக்கி வைத்ததோடு அனைத்துலக சமூக வளப்ப மாநாட்டை துவக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மேற்கண்டவாறு பேசினார்.
நேற்றைய மக்களவைக் கூட்டத்தில் போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் அவை ஒத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.