பெட்டாலிங், நவ.22-
சிலாங்கூர் பல்லின மக்களின் சிறப்பு 2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை ஊக்குவிக்கும் மாநில அரசாங்கத்தின் முயற்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு 30 மில்லியன் சுற்றுப் பயணிகளை நாட்டிற்குள் கொண்டு வரும் இலக்கு அடையப்படும் என்று கலை, பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் முகமது பக்தியார் தெரிவித்தார்.
சுற்றுப் பயணிகளின் வருகையால் ஒட்டு மொத்தமாக 100 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இது சிலாங்கூருக்கு மட்டுமல்லாது மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றார் அவர்.
சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் நாட்டின் நுழைவாயிலாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான சுற்றுப் பயணிகளைக் கவரும் மூன்று முக்கிய மாநிலங்களில் ஒன்றாக சிலாங்கூர் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.