கோலாலம்பூர், நவ.27-
அவதூறு பரவலையும் வெறுப்புணர்வைத் தூண்டும் உரைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பொய்யான செய்திகளும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் உரைகளும் பல்லின சமுதாயத்தைக் கொண்டிருக்கும் மலேசியாவை அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதோடு மக்களை அழிக்கக் கூடிய மூன்றாவது அபாயமாகவும் இவை திகழ்கின்றன என்றார் அவர்.
மலேசியாவில் அலது உலகம் முழுவதிலும், பொய் தகவல் மற்றும் வெறுப்பேற்றும் உரை போன்றவை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவையாகும். அவற்றை நாம் எதிர்கொள்வது அவசியமாகும் என்று கருத்தரங்கம் ஒன்றில் ஆற்றிய உரையில் கிட் சியாங் கூறினார்.
2017ஆம் ஆண்டு சமூக ஊடகங்கள் பரப்பிய பொய் தகவல்களுக்குத் தானும் பலியானதை அவர் நினைவுகூர்ந்தார். மலேசிய மக்கள் மத்தியில் இத்தகைய நடவடிக்கை அதிகளவில் பரவி வருவதோடு ஒரு வழக்கமாகவும் ஆகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.