ரவாங், நவம்பர் 29:
கடந்த ஜனவரி தொடங்கி ஜூலை வரை 8.8 மில்லியன் பயனீட்டாளர்கள் சிலாங்கூர் விவேக பேருந்து சேவை மூலம் பயனடைந்து உள்ளனர் என சிலாங்கூர் மாநில ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆகிய நிரந்தரக் குழுக்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். இந்த இலவச சேவை 138 பேருந்துகள் மற்றும் 43 பயண பாதைகள் உள்ளடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” சிலாங்கூர் விவேக பேருந்து சேவை மொத்தம் ரிம 106 மில்லியன் செலவில் செயல்பட்டு வருகிறது. இதில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 81 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதியை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
” இந்த ஆண்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் விவேக பேருந்து சேவையை மேலும் விரிவாக்கம் செய்ய ரிம 30 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது,” என்று பத்து ஆராங்கில் செலாயாங் நகராண்மை கழகத்தின் 3-வது புதிய சிலாங்கூர் விவேக பேருந்து பாதையை திறந்து வைத்து பேசும் போது இவ்வாறு எங் ஸீ ஹான் கூறினார்.