பெட்டாலிங் ஜெயா, டிச.4-
அரச மலேசிய கடற்படைக்காண (டிஎல்டிஎம்) அதிவேக விரைவுபடகு (எஃப்ஐசி) டெண்டர் நடவடிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறும் புகார் ஏதேனும் உள்ளதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) விசாரணை மேற்கொள்ளும்.
இந்த விவகாரம் மீதான விசாரணையில் முறைகேடு குறித்த புகார் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்களுக்கு அதன் விவரங்கள் அம்பலப்படுத்தப்படும் என்று எஸ்பிஆர்எம் ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா கூறினார்.
“இவ்விவகாரம் தொடர்பில் ஆணையம் புகார் ஏதும் பெற்றுள்ளதா என்பது ஆராயப்படும். அதன் பின்னர் மக்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்படும்” என்று நன்னெறி பண்பு அமலாக்கம் மூலம் வர்த்தக விரிவாக்கம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு பேசினார்.
அரச மலேசிய கடற்படைக்கு 18 விரைவு படகு கொள்முதல் டெண்டரில் முறைகேடு மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு லத்தீஃபா பதிலளித்தார்.