கோலா லம்பூர், டிசம்பர் 10:
மக்கள் நீதிக் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில் அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதியளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாடு (ஏபெக்) முடிவடைந்த பிறகு பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க தயார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் துன் மகாதீர் கூறினார்.
ஏபெக் மாநாட்டுக்கு முன்பு பதவி மாற்றம் செய்யப்பட்டால் அது இடையூறாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நான் அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பேன். நாட்டு மக்கள் அவரை விரும்பவில்லை என்றால் அது அவர்களின் முடிவு. எந்த விதமான குற்றச்சாட்டு அவர் மீது இருந்தாலும் எனது உறுதிமொழியை நான் செயல்படுத்துவேன்,” என்றார் அவர்.
அப்படியானால், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பதவியை ஒப்படைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “ நேரம் வரும்போது அதைக் கவனிப்போம்,” என்று பதிலளித்தார் துன் மகாதீர்.