NATIONAL

நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் 2020-ஆம் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

புத்ராஜெயா, டிசம்பர் 31:

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்புத்தாண்டு 2020 சவால் மிக்க ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அதனைச் சாதுரியமாகச் சமாளித்து வெற்றி நடைபோட மலேசியர்கள் அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும். எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும், அமைதியை, சகோதரத்துவத்தை அன்பைப் பரிமாறிக் கொள்வதிலேயே நமது வெற்றியுள்ளது என்பதை மக்கள் மறக்கக் கூடாது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கினோம். ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு சக்திகளின் சதியாலும் மக்கள் கடுமையாக வேறுபட்டு நிற்பதைக் காண முடிகிறது. இதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இயற்கையாகவே, மக்கள் அன்றாட வாழ்வை சுமூகமாகச் சமாளிக்கக் கடுமையாகப் போராட வேண்டி உள்ள வேளையில், சிறு சலசலப்புகளுக்குக் கூடச் சந்தேகங்களுடன் நாம் சகோதரர்களை நோக்க வேண்டிய இக்கட்டில் இருந்தால் என்ன நடக்கும்? வெறுப்பும், வேதனையும் வேண்டாத சக்திகளின் ஊடுருவும் நாட்டில் அமைதியின்மைக்கே வழிவகுக்கும்.

நமது முன்னோர், ஆசியாவின் பல இன, சமய, மொழி மக்களைப் பிரதிபலிக்கும் வண்ணமே நாட்டுக்கு மலேசியா என்று பெயர் சூடினர். ஆசியா என்னும் பரந்த நிலப்பரப்பின் பலதரப்பட்ட அம்சங்களின் சமயங்களின், கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக விளங்கும் வண்ணம் அமைக்கப்பட்ட தேசம், இன்று அதன் பரந்த கொள்கை மற்றும் அடிப்படையிலிருந்து விலகி வெகு தூரம் திசை திருப்பப்பட்டு விட்டது. நீண்டகாலம் தவறாக வழி நடத்தப்பட்ட தேசத்தை மீண்டும் சரியான தடத்தில் பயணிக்க வைப்பதே, இன்றைய அரசுக்குச் சவால் மிக்க பணியாகும்.

மக்கள் இனம், சமயம், மொழி என்ற வேற்றுமைகளைக் கைவிட்டு, ஒற்றுமை, நாடு, முன்னேற்றம் என்ற தடத்திற்குத் திரும்பினால், நாடு வேகமான முன்னேற்றத்தை அடையும், பொருளாதார வெற்றிகளைக் குவிக்கும். அதனால், அனைத்து மக்களும் இந்தப் புத்தாண்டில் வேற்றுமைகளுக்கு அதிக இடமளிக்காமல், ஒற்றுமையுடன் நாட்டு முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்ல முற்பட வேண்டும்.

முக்கியமாக நம் மக்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுத் தொழில் முனைவர்களாகவும், தொழில் நுட்பவியலாளர்களாகவும் மாற வேண்டும். அதற்கு அரசாங்கம் நிறையப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவதால் இளைஞர்கள் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்

நாட்டின் முன்னேற்றமே நமது முன்னேற்றம்! நம் சமுதாயமும், நாடும் பல வாராக ஏமாற்றப் பட்டுள்ளது. நம்மைச் சுரண்டியவர்கள், நாட்டைச் சுரண்டியவர்கள் இன்று வீர வசனம் பேசுகிறார்கள், வெளி வேஷம் போடுகிறார்கள், இனங்களுக்கிடையே பிரச்சனைகளுக்குத் தீமூட்டுகிறார்கள். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, எரியும் நெருப்பில் குளிர்காய எத்தனிக்கிறார்கள். இப்படிப்பட்ட தேச விரோதிகளிடமிருந்து நம் இளைஞர்களைக் காப்பாற்றியாக வேண்டும். விஷமிகளின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையேல் நமது பிள்ளைகள், குண்டர் கும்பல் பேர்வழிகளாகவும், ஏமாற்று பேர்வழிகளாகவும் உருவெடுப்பதற்கு இவர்கள் முன் உதாரணமாகி விடுவார்கள்.

நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இத்தேசத்தில் சிறப்பாக வாழ அனைவருக்கும் இடமுண்டு, நாட்டில் வளமுண்டு, மார்க்கமுண்டு, சமத்துவமான தேசத்தில் அனைவருக்கும், எல்லா வாய்ப்பும், வசதிகளும் பெற வேண்டும். ஆனால் அது மறுக்கப்படுகிறது. நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறைகளும் அதனை மீண்டும் அடையச் சரியான அடித்தளமிட இப்போதுள்ள வாய்ப்பினை தவறவிட்டால் எதிர்காலச் சந்ததி நம்மை நிந்திக்கும் என்பதனை மனதில் நிறுத்தி, புதிய ஆண்டில், புது இலட்சியத்துடன் முழு சமுதாயத்தையும் மாற்றியமைக்க முற்படுவோம், 2020 யை மாற்றதிற்கான ஆண்டாக கொண்டாடுவோம்.

அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பிலும் பாக்காத்தான் சார்பிலும், புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


Pengarang :