கோலாலம்பூர், டிச.31-
வாக்களிக்கும் வயதை 21இல் இருந்து 18-ஆகக் குறைத்தன் மூலம் மலேசிய நாடாளுமன்றம் புதிய வரலாற்றை 2019ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது.
ஜனநாயக முறையைப் பின்பற்றும் நமது நாட்டின் அரசியல் ஏட்டில் இது ஒரு புதிய வரலாறாகும். ஆசியான் உறுப்பு நாடுகளில் இந்தேனேசியா தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் வாக்களிக்கும் வயது 18ஆக உள்ளது; இப்பட்டியலில் மலேசியாவும் தற்போது இணைந்துள்ளது.
இந்தோனேசியாவில் வாக்களிக்கும் வயது 17ஆகும். சிங்கப்பூர் தவிர்த்து குவைத், லெபனான், ஓமான், கெமெரூன் மற்றும் தோங்கா ஆகிய நாடுகளில் வாக்களிக்கும் வயது இன்னும் 21ஆகவே உள்ளது.
தேர்தல் கொள்கை அறிக்கையில் பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி அளித்தது போல், வாக்களிக்கும் வயதோடு மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினராவதற்கான வயது தகுதியும் 18ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயது நிரம்பியவுடன் இவர்கள் தானாகவே தேர்தல் ஆணைய ஆணையத்தின் வாக்காளர்கள் பதிவேட்டில் இடம்பெறுவர்.