கிள்ளான், டிச.31-
கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அமானா கட்சி கடுமையாகப் பாடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது. வரும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்பு மனு தாக்கலின் போது தாமே நேரிடையாக களம் இறங்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் முகமது சாபு கூறினார்.
“வேட்பு மனு தாக்கல் தினத்தில் நானும் நமது தேர்தல் இயந்திரமும் களம் இறங்கி , பக்காத்தான் வெற்றிக்காக கடுமையாகப் பாடுபடவிருக்கிறோம்” என்று தற்காப்பு அமைச்சருமான அவர் சொன்னார்.
கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்தில் சிலாங்கூர் மகளிர் சமூக நல சங்கத்தின் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, காசே மலேசியா ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் கிராமத் தலைவர் மற்றும் இந்த சமூகத் தலைவர்களிடம் வருடாந்திர நிதி ஒப்படைப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த அமைச்சர் மேற்கண்டவாறு பேசினார்.