ஷா ஆலம், ஜன.1-
மாநில இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு மற்றும் மனித வளத் துறை ஆட்சிக் குழுவின் திட்டங்களில் முக்கியமானது வேலையில்லாத விகிதாச்சாரத்தை இவ்வாண்டு 2.5 விழுக்காடாகக் குறைப்பதாகும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓஸ்மான் கூறினார். இந்த விகிதாச்சாரம் தற்போது 2.8 விழுக்காடாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
மாநிலம் முழுவதிலும் பல்வேறு வேலை வாய்ப்பு சந்தைகளை நடத்துவதன் மூலம் 2021ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த இலக்கை அடைய மாநில அரசு முயன்று வருவதாக அவர் சொன்னார். இந்நடவடிக்கைகள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்க முடிவதோடு இந்த இலக்கையும் நாம் அடைய முடியும் என்று இங்குள்ள மெர்டேக்க சதுக்கத்தில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், 2022 மலேசிய விளையாட்டுப் போட்டியை (சுக்மா) ஏற்று நடத்தும் உபசரணை மாநிலமாக சிலாங்கூர் தேர்வு பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.