ஷா ஆலம், ஜன.7-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 16,800 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக மந்திரி பெசார் கழகத்தீன் (எம்பிஐ) மூலம் மாநில அரசாங்கம் 1.68 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.
மாணவர்களின் கல்வி தரத்தை வலுப்படுத்த பெற்றோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாக எம்பிஐ வர்த்தக நடவடிக்கை அதிகாரி முகமது ஜாஃபாருடின் முகமது அலி கூறினார்.
2017ஆம் ஆண்டு தொடங்கிய மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என்ற திட்டத்தின் கீழ் 7 வயது 12 வயது வரையிலான மாணவர்களுக்கு 100 ரிங்கிட் மதிப்பிலான ரொக்க உதவி, பள்ளிச் சீருடை, பள்ளிப் பை அல்லது எழுத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
2018ஆம் ஆண்டு , 8,400 மாணவர்களுக்காக 1.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாண்டு இத்திட்டம் 56 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்வதற்கு 1.68 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
“பி40 பிரிவில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித் திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்” என்றார்.
“ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கான உதவித் தொகை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி அலுவலக்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது” என்று அவர் விவரித்தார்.