ஷா ஆலம், ஜன.8:
சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) மாநில நிலையில் மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் பிரசித்தி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் பணியாளர்கள் தத்தம் வேலைத் தரத்தை இரட்டிப்பாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பணியாளர்கள் அனைவரும் தத்தம் கடமையைச் செய்யும்போது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வது அவசியம் என்று யுனிசெல் தலைவரும் இணை வேந்தருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் ஒத்மான் வலியுறுத்தினார்.
“கடந்தாண்டு நாம் பல வெற்றிகளைக் குவித்துள்ளோம். இவ்வாண்டும் இந்நிலை தொடரும் வகையில் நிர்வாகம் மற்றும் ஆய்வு ரீதியில் மட்டுமல்லாது கல்வி ரீதியிலும் யுனிசெல் தரமான பணி கொள்கையை அமல்படுத்தும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெஸ்தாரி ஜெயா வளாகத்தில் வழங்கிய 2020 புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்நிகழ்ச்சி ஷா ஆலம் வளாகத்தில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கை, அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு போன்றவற்றின் வாயிலாக யுனிசெல் வெளி தரப்பினருடனான ஒத்துழைப்பைத் தொடரும் என்றார் அவர்.
“ யுனிசெல்லின் பெயரை உலக அரங்கில் நிலைநாட்டும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் யுனிசெல் குறிப்பாக சிலாங்கூரில் அதன் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறியத் தொடங்கியுள்ளனர்” என்று அவர் மேலும் சொன்னார். இந்நிகழ்ச்சியில் முகமது ரிட்சுவான் இரு வளாகங்களைச் சேர்ந்த 34 பணியாளர்களுக்கு பள்ளி உதவி நிதியை வழங்கினார்.