ஷா ஆலம், ஜனவரி 10:
2019ஆம் ஆண்டு முழுவதும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அடைவு நிலை பெருமையளிப்பதோடு 2020ஆம் ஆண்டுக்கான ஓர் உந்துதல் சக்தியாகவும் இது அமைந்துள்ளது.
இரு மாவட்ட அலுவலகங்கள், இரண்டு அரசாங்க அமைப்புகள், இரு இலாகாக்கள் மற்றும் ஏழு ஊராட்சி மன்றங்களும் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளன என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“பல்வேறு வியக்கத்தக்க அடைவு நிலைகளோடு 2019ஆம் ஆண்டை சிலாங்கூர் முடித்துக் கொண்டுள்ளது” என்றார்.
சம்பந்தப்பட்ட 13 இலாகாக்களும் தங்கள் பணிகளை சிறப்பான முறையிலும் நேர்மையோடும் நிறைவேற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இவற்றோடு பொதுச் சேவை துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றின் அங்கீகாரங்களை மாநில அரசாங்கம் கடந்த ஆண்டில் பெற்றுள்ளது என்று மந்திர் பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
கடந்தாண்டு மாநிலம் பெற்ற 16.4 பில்லியன் வெள்ளி முதலீடு நிர்ணயிக்கப்பட்ட 10 பில்லியன் வெள்ளி இலக்கைத் தாண்டியுள்ளது. வட்டாரத்தின் முதன்மை விவேக மாநில இலக்கை இதன் வழி சிலாங்கூர் நிரூபித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் சிலாங்கூர் 18.9 பில்லியன் வெள்ளி முதலீட்டைப் பதிவு செய்தது. 30 ஆண்டு வரலாற்றில் அடைந்த சாதனை இது.